கொல்லென்று சொல்

Mathan | 9:06 PM | 0 comments

















பிறப்புக்கு நாங்கள் வேண்டும்
         பிறகெல்லாம் நீங்க வேண்டும்
இறப்புக்கும் இறுதி மட்டும்
         இருந்தாக வேண்டும் பின்னர்
சிறப்புக்கு மட்டும் நாங்கள்
         தொலைதூரம் போகவேண்டும்.
துறந்திடல் வேண்டும் சாதி
          மறைந்திடல் வேண்டும் மண்ணில்.


விளையாட்டு நண்பன் வந்தால்
         விருந்தோம்பல் கொல்ல வேண்டும்
முளைவிட்டால் நாங்களெல்லாம்
          முடங்கியே செல்ல வேண்டும்
பிழையென்று கண்டும் நீங்கள்
          பிற்போக்காய் ஆவதென்ன
களையென்று சாதிப் பேயை
         முளையிலே களைய வேண்டும்


ஆதாம் ஏவாள் இன்றி
        அடுத்ததோர் வம்சமுண்டோ
நீதான் புலையன் என்ற
       நீதிதான் நிலையறுமோ
சாதான் இறுதியென்றால்
       சாதிகள்தான் சாய்ந்திடுமோ
கோதான் காக்கவேண்டும்
        பேதமை போக்கவேண்டும்.


உடலில் ஒரு குறையுமில்லை
          உதவிடாத மனமுமில்லை
கடலில் போய் விழுவதற்கும்
         காரணங்கள் ஏதுமில்லை
திடமாய் ஓர் உறுதி கொண்டு
         திக்கெல்லாம் சேதி சொல்லு
உடனே கொல் சாதியென்று
          ஊரெல்லாம் உரக்கச் சொல்லு.

Category: ,